கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் ஊழியர் ஒருவர் நோயாளியிடம் கடுமையாக நடந்து சக்கர நாற்காலியிலிருந்து கீழே தள்ளிய விவகாரத்தில் காணொலி வெளியானது. அந்துகுறித்த செய்தி வெளியானதை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காந்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 18 கோடி மதிப்பீட்டில் 8 அடுக்குகள் கொண்ட மருத்துமனை திறக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மேல்சிகிச்சைக்க இந்த அரசு தலைமை மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படுகின்றனர். இது மட்டுமின்றி புறநோயாளிகளாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த கோபால் (23) கல்லீரல் பாதிக்கப்பட்டு அவ்வப்போது கிருஷ்ணகிரி அரசு தலைமை சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கோபால் வயிறு திடீரென வீங்கியதால் கடந்த 11-ம் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கபட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோபாலுக்கு வயிற்றில் நீர் சேர்ந்து இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதித்தனர். அறுவை சிகிச்சை செய்வதற்காக வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்வதற்காக புதிய கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து கீழ் பகுதியில் உள்ள ஸ்கேன் எடுக்கும் அறைக்கு சக்கர நாற்காலி மூலம் அங்கு பணியாற்றும் ஊழியர் பாஸ்கர் என்பவர் கோபாலை அழைத்து சென்றுள்ளார்.
ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் அவரது படுக்கைக்கு அழைத்து வந்து படுக்கையில் ஏறி படுக்க சொல்லியிருக்கிறார். ஆனால் கோபாலால் எழ முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் பாஸ்கர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி படுக்கைக்கு கீழே தரையில் படுக்க சொல்லியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் சக்கர நாற்காலியை கவிழ்த்து கோபாலை தரையில் தள்ளியுள்ளார், தரையில் விழுந்த கோபாலுக்கு உதவாமல் கண்டபடி திட்டிவிட்டு கோபாலை அப்படியே விட்டுவிட்டு சக்கர நாற்காலியை எடுத்துச் சென்றுவிட்டார். இதை அங்குள்ள ஒருவர் செல்போனில் படம் பிடித்து காணொலியில் பரப்ப அது வைரலானது.
அதனடிப்படையில் வந்த செய்தியை கண்டு அதிர்ந்த மாவ்ட்ட ஆட்சியர் பிரபாகர் ஊழியர் பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டதையடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் பரமசிவம், ஊழியரை தற்காலிக பணியிடை செய்தார்.
பத்திரிக்கையில் வந்த இது தொடர்பான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.