செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு உயர்ந்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் உள்ள நீரை அளவுடன் திறந்துவிட உத்தரவிடுமாறு தமிழக முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் எழுதியுள்ளார்.முற்காலங்களில் நடந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கடுமையான மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 21 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இவ்வாறு நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளம் ஏற்படலாம் என பெருமளவில் அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விஜயகுமார் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015 டிசம்பரில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது எங்களது பகுதியில் இருந்து அடையாறுவரை பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது. இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21 அடியை தாண்டி உயர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமேயானால் 2015-ம் ஆண்டை போல பெரிய பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
இதனை கருத்தில் கொண்டு முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்து விட உத்தரவு பிறப்பித்தால் கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க இயலும். எனவே இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். தங்களால் இதை செய்ய முடியும் என நான் ஒருமனதாக நம்புகிறேன் கரையோரம் வசிக்கும் மக்களை காப்பாற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் கூறியுள்ளார்.